பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு வாக்கு சேகரித்த விசிக தலைவர் திருமாவளவன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் போட்டியாளர்களின் ஒருவர்தான் விக்ரமன். இந்த சீசனின் மி்க முக்கிய போட்டியாளர். இவர் தனது பயணத்தை விஜய் டிவி சீரியலில்தான் துவங்கினார். தொடர்ந்து முன்னணி செய்தி ஊடகங்களில் பணிபுரிந்தார்.
பி்ன்னர் யூடியூப் சேனல் ஒன்றில் நெறியாளராக பல்வேறு அரசியல் தலைவர்களை பேட்டி எடுத்தார். திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி-யை பேட்டி எடுத்த போது, இவரது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கோபமுற்று இயக்குநர் பாதியிலேயே வெளியேறினார். அந்த வீடியோ மிக வைரலானது.
மேலும் பாண்டே,எஸ்.வி சேகர் ஆகியோரிடம் எடுத்த நேர்காணல்கள் மில்லியன் கணக்கில் விவுஸ்களை குவித்தது. திடிரென அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அரசியல் ரீதியாக செயல்பட்டு வந்தார்.
இந்த சீசன் பிக்பாஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறார். முதலில் அவர் கவனம் பெறாமல் இருந்தாலும், தனது அரசியல் கருத்துக்கள் மூலம் பலரால் பாராட்டப்பட்டார். மற்ற போட்டியாளர்கள் நிதானம் இழந்து ஒருமையில் பேசினால் கூட, இவர் மரியாதையாக பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் தமிழ்நாட்டின் பெயர் எப்படி வந்தது என்று அவர் டிடி-யிடம் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றிபெற வைக்க அவருக்கு வாக்களியுங்கள் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நேரடி அரசியலில் இருக்கும் ஒருவர் இது போன்ற நிகழ்ச்சிக்காக வாக்கு கேட்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.