உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவபெருமான் கோவில் என்று போற்றி புகழப்படும் இடம் உத்திரகோசமங்கை திருக்கோவில் (Uthirakosamangai Temple) . இந்த கோவில் குறித்த வரலாறு மற்றும் அதனை சுற்றியுள்ள சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.

உத்திரகோசமங்கை கோவில் வரலாறு
இந்த தலத்தின் முழுப்பெயர் திருஉத்திரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில், உலகிலேயே முதல் சிவ ஸ்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது. நவக்கிரகங்கள் குறித்து அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமான் பார்வதிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

இராமாயணக் காலத்திலேயே இந்த கோவில் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இலங்கேசுவரன் இராவணன் இங்கு அடிக்கடி வந்து சிவ தரிசனம் செய்துள்ளார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. பின்பு இந்த கோவிலின் ஈசனையும், அம்பாளையும் வழிபட்ட மண்டோதரி பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.
தாழம் பூ வைத்து வழிபாடு
சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த தாழம் பூ. மற்ற சிவ ஆலயங்களில் தாழம் பூ வைத்து வழிபட மாட்டார்கள். இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் நின்று போகாமல் இன்றும் தொடர்கிறது.
கோவில் செல்லும் வழி
மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி ஆகியவற்றை தாண்டி , இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை Railway level crossing-ஐ தாண்டி, 7-கி.மீ. சென்றால் இந்த கோவிலை அடையலாம். சாலை பிரியும் இடத்தில் கோயிலின் பெயர் பலகை உள்ளது.

இந்த ஆலயத்தை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை, பின்னர் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.