இந்திய அளவில் வழங்கப்படும் ஆதார் அட்டையைப் போன்று தமிழ்நாடு மக்களுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்த உள்ளது.

ஆதாருக்கும் மக்கள் ஐடிக்கும் என்ன வேறுபாடு?
ஆதாரில் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் ஐடியில் அடையாள அட்டை வழங்கப்படாது. அடையாள எண் மட்டுமே உருவாக்கப்படும்.
அரசு திட்டங்கள், வங்கிப் பயன்பாடுகள் போன்றவற்றுக்கு அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்தலாம். மக்கள் ஐடி என்பது இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆதார் அட்டைக்கு பயோமெட்ரிக் பதிவுகளாக கைரேகை, கண்ணின் கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும், புகைப்படம் தேவைப்படும். மக்கள் ஐடியில் இது எதுவும் தேவைப்படாது. அதேவேளையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் பயனாளிகளை கண்டறிந்து அதுதொடர்பான தரவுகள் மக்கள் ஐடியில் சேர்க்கப்படும்.
ஆதார் அட்டை என்பது சில சேவைகளுடன் இணைக்கப்படும். ஆனால், தரவுகளை இரு துறைகளுக்கு இடையே ஒப்பிட்டு பார்ப்பதற்காக மட்டுமே மக்கள் ஐடி பயன்படுத்தப்படும். ஆதார் எண் சேவையை தனிநபர் கணினி மூலம் லாக் – இன் செய்து பெற முடியும். மக்கள் ஐடி சேவையை கணினி மூலம் லாக் -இன் செய்து பெற முடியாது.