‘பிச்சைக்காரன் 2′ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகானவர் விஜய் ஆண்டனி. பல முண்ணனி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் நான், பிச்சைகாரன் போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் பிரபலமானார். ’பிச்சைகாரன்’ படம் அவருக்கு மிகவும் நல்ல பெயரை பெற்று தந்தது.
மலேசியாவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்று நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லங்கா தீவு கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகு மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு பற்கள் உடைந்தன. சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இதையடுத்து லங்கா தீவில் இருந்து விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்ப இருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.