வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுவடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை மற்றும் அதிக காற்று வீசியுள்ளது.

மாண்டஸ் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசிய நிலையில், இன்று காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்ப்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,வேலூர், திருவண்ணாமலை, , கடலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், கடலூர் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தீவிரப்புயலாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ், அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.