வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது.

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது. முக்கியமாக மன்னார்குடி, நீடாமங்கலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் நகரம், திருவாரூர் நகரம், கும்பகோணம், வலங்கைமான், சீர்காழி, சிதம்பரம் கடலூர், ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. கிழக்கு காற்று காரணமாக, டெல்டாவில் நிலவி வந்த மழை தட்டுப்பாடு பெரும் அளவில் தீர்க்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்தது. இது காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக உருவான மழை கிடையாது. இனிமேல்தான் தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் திருவாரூர், அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதற்கான டேட்டா இன்னும் வரவில்லை. இந்த மழை டெல்டா மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லாமல் ஏற்பட்ட இடைவெளியை போக்கும் வகையில் இருக்க போகிறது. நேற்றைய நாள் டெல்டா மாவட்டத்திற்கு மிகப்பெரிய நாளாக அமைந்தது. மழை அடுத்த 3 நாட்களுக்கு குறைவாக இருக்கும்.
8ம் தேதி வரை மழை குறைவாக இருக்கும். ஏனென்றால் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிக்கொண்டு இருக்கிறது. அதனால் 3 நாட்களுக்கு மழை குறைவாக இருக்கும். தென் தமிழ்நாட்டில் மழை குறைவாக இருக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார்